மோகன்லால் படத்தில் சாம் சிஎஸ்..!!
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்துக்குப் பின்னணி இசை அமைப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.
தன்னுடைய இசைப் பரிமாணங்களை வெளிப்படுத்துவதில் கைதேர்ந்தவராக இருப்பவர் சாம் சிஎஸ். விக்ரம் வேதாவின் பின்னணி இசையில் கதை சொல்லும் பாணியில் அமைந்த ஹீரோவுக்கான ஆர்க்கெஸ்ட்ரல் கோரஸ் ஆக இருந்தாலும் சரி, புரியாத புதிர் படத்தில் வந்த எமோஷனல் எசன்ஸ் ஆக இருந்தாலும் சரி, அவை நம் மனதை விட்டு அகலாதவையாக அமைந்தன. தற்போது இவர் மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்துக்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் கேரளாவில் தன் பயணத்தைத் தொடங்க இருக்கிறார்.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சாம் “விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்படப் பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. குறிப்பிட்ட வரையறைக்குள் நின்றுவிடாமல் ஒட்டுமொத்த படத்துக்கும் என்னால் இசையமைக்க முடியும் எனத் தீவிரமாக நம்புபவன் நான். ஆனால் மோகன்லால் சாரின் ஒடியன் படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
ஒடியன் கதை கொண்டுள்ள இசையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ள சாம், “ஒடியன் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் ஒரு த்ரில்லர் கதை என்பதைக் கேள்விப்பட்ட உடனே கேரளாவின் பழங்கால புராதன இசைக்கருவிகளை உபயோகிக்கலாம் என்ற யோசனை தோன்றியது. வழக்கமாக மூங்கில் இசைக்கருவி என்றால் அது ஃப்ளூட்தான். ஆனால் 6 அடி நீள மூங்கில் இசைக்கருவி ஒன்றை, அதை இசைக்கத் தெரிந்த வயதான பெண் ஒருவரை வைத்து இசைத்து, படத்துக்குப் பயன்படுத்திக் கொண்டோம்” என்று படத்தில் தனக்குள்ள பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தி முடிப்பதற்கு முன்பே சில காட்சிகளுக்கு இசையமைத்துள்ள சாம், ஒடியன் படத்தில் இசையில் பரிசோதனை முயற்சிகள் செய்தும் வருகிறார். இதற்கிடையில் சாம் சிஎஸ் கரு, கொரில்லா, அடங்க மறு, மிஸ்டர் சந்திரமௌலி, வஞ்சகர் உலகம் என அடுத்தடுத்த படங்களால் தமிழ்த் திரையுலகின் இன்றியமையாத இசையமைப்பாளராகியுள்ளார்.