இது முடிவல்ல, இன்னும் இருக்கு! :மிஷ்கின்…!!!
ஜனரஞ்சகமான படைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வரும் இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். திரைப்படத்தில் இருக்கும் இவரது ஜனரஞ்சகமான பாத்திரப் படைப்புகளுக்கு சற்றும் குறையாதது இவரது ரியல் வாழ்க்கை. சைக்கோ திரைப்படத்தினை எடுத்ததைவிட, அதன்பிறகு அந்தப்படம் குறித்து மிஷ்கின் கொடுத்த விளக்கங்கள் ஒவ்வொரு ரசிகனையும் வியந்து பார்க்க வைத்தன. விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தை பலவாறு விமர்சித்தாலும் படத்தின் சில காட்சிகளை அதன் நியாயத்துக்காக பாராட்டவும் செய்தனர். அப்படி தனது படைப்புக்கான அங்கீகாரத்தைக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி சொல்லி மிஷ்கின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
தனது படத்துக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு குறித்து பேசிய மிஷ்கின் “இதை மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட ‘அளவில்லாத அன்பு’ என்றே கூறுவேன். படத்தை பார்த்த மக்கள் எடுத்து சென்றதும், கொடுத்ததும் அதுதான். எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகை பின்புலத்தில் கதை சொன்னாலும், பார்க்கும் பார்வையாளன் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே, அதனை கொண்டாடுவான். நான் இந்தப்படங்களை கண்மூடித்தனமான நம்பிக்கையில் தான் உருவாக்கினேன். ஆனால் இறுதியில் அளவிலா அன்பை பெற்றிருக்கிறேன். ‘கண்மூடித்தனமான நம்பிக்கை, ஆத்மாவின் தேடல்’ இரண்டும் தான் வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தம் என்பதை நம்புவன் நான். உண்மை என்னவெனில் எனது ‘பிசாசு’ நாயகன் சித்தார்த், ‘துப்பறிவாளன்’ கணியன் பூங்குன்றன், ‘சைக்கோ’ கௌதம் அனைவரும் இந்த மந்திரத்தை நம்புபவர்களே. ரசிகர்கள் இதனை வாழ்வின் அன்பாக எடுத்து செல்ல வேண்டுமென்பதே என் விருப்பம். நான் வெகு பணிவுடன் இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் பணிபுரிந்த நடிக நடிகையர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விமர்சகர்கள், என் வளர்ச்சியை விரும்பும் அன்பு உள்ளங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனக்கு தனித்துவ வெற்றி தந்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதே போல் அனைவரையும் மகிழ்விக்கும் திரைப்பயணத்தை தொடர விரும்புகிறேன். மிக விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன் நன்றி” எனக் கூறியுள்ளார்.
மிஷ்கினின் இந்த அறிவிப்பு, தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் ‘துப்பறிவாளன் 2’ படத்தைப் பற்றிய சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. சைக்கோ படம் முடிந்ததும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தார் மிஷ்கின். விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், துப்பறிவாளன் 2 ஷூட்டிங் நிறுத்தப்பட்டு விஷால் மீதியுள்ள படத்தை இயக்கப்போகிறார் என்று தமிழ் சினிமாவில் பேசப்படுகிறது. இந்நிலையில், என் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என மிஷ்கின் கூறியிருப்பது இந்த சந்தேகத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.